Thirukkural

364

அறத்துப்பால்துறவறவியல்அவா அறுத்தல்

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

Transliteration:

Thoouymai Enpadhu Avaavinmai Matradhu

Vaaaimai Venta Varum

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)துறவறவியல்Ascetic Virtue • Thuravaraviyal
அதிகாரம் (Topic)அவா அறுத்தல்Curbing of Desire • Avaavaruththal

English Translation

To nothing crave is purity That is the fruit of verity

Couplet

Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow

Explanation

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

பரிமேலழகர் உரை

தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது

உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை

ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவருக்குப் பேரின்ப வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமையே ஆகும். அது மெய்ம்மையை விரும்ப, தானே உண்டாவதாகும்.

thirukkural.site