Thirukkural

221

அறத்துப்பால்இல்லறவியல்ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Transliteration:

Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam

Kuriyedhirppai Neera Thutaiththu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)ஈகைGiving • Eekai

English Translation

To give the poor is charity The rest is loan and vanity

Couplet

Call that a gift to needy men thou dost dispense,All else is void of good, seeking for recompense

Explanation

To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின் வைக்கப்பட்டது.) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன

வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்டவர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும்.

thirukkural.site