Thirukkural

101

அறத்துப்பால்இல்லறவியல்செய்ந்நன்றியறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

Transliteration:

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum

Vaanakamum Aatral Aridhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)செய்ந்நன்றியறிதல்Gratitude • Seynnandri Aridhal

English Translation

Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven

Couplet

Assistance given by those who ne'er received our aid,Is debt by gift of heaven and earth but poorly paid

Explanation

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

சாலமன் பாப்பையா உரை

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. ) செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை

முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.

thirukkural.site